Responsive image

பெரிய_திருமொழி

பெரிய திருமொழி.541

பாசுர எண்: 1488

பாசுரம்
கலங்க முந்நீர் கடைந்தமு
தங்கொண்டு, இமையோர்
துலங்கல் தீர நல்கு
சோதிச் சுடராய,
வலங்கை யாழி யிடங்கைச்
சங்க முடையானூர்,
நலங்கொள் வாய்மை யந்தணர்
வாழும் நறையூரே (6.5.1)

பெரிய திருமொழி.542

பாசுர எண்: 1489

பாசுரம்
முனையார் சீய மாகி
அவுணன் முரண்மார்வம்,
புனைவா ளுகிரால் போழ்பட
வீர்ந்த புனிதனூர்
சினையார் தேமாம்f செந்தளிர்
கோதிக் குயில்கூவும்,
நனையார் சோலை சூழ்ந்தழ
காய நறையூரே (6.5.2)

பெரிய திருமொழி.543

பாசுர எண்: 1490

பாசுரம்
ஆனைப் புரவி தேரொடு
காலா ளணிகொண்ட,
சேனைத் தொகையைச் சாடி
யிலங்கை செற்றானூர்,
மீனைத் தழுவி வீழ்ந்தெழும்
மள்ளர்க் கலமந்து,
நானப் புதலில் ஆமை
யொளிக்கும் நறையூரே (6.5.3)

பெரிய திருமொழி.544

பாசுர எண்: 1491

பாசுரம்
உறியார் வெண்ணெ யுண்டு உர
லோடும் கட்டுண்டு,
வெறியார் கூந்தல் பின்னை
பொருட்டுஆன் வென்றானூர்,
பொறியார் மஞ்ஞை பூம்பொழில்
தோறும் நடமாட,
நறுநாண் மலர்மேல் வண்டிசை
பாடும் நறையூரே (6.5.4)

பெரிய திருமொழி.545

பாசுர எண்: 1492

பாசுரம்
விடையேழ் வென்று மென்தோ
ளாய்ச்சிக் கன்பனாய்,
நடையால் நின்ற மருதம்
சாய்த்த நாதனூர்,
பெடையோ டன்னம் பெய்வளை
யார்தம் பின்சென்று
நடையோ டியலி நாணி
யொளிக்கும் நறையூரே (6.5.5)

பெரிய திருமொழி.546

பாசுர எண்: 1493

பாசுரம்
பகுவாய் வன்பேய் கொங்கை
சுவைத்தா ருயிருண்டு,
புகுவாய் நின்ற போதகம்
வீழப் பொருதானூர்,
நெகுவாய் நெய்தல் பூமது
மாந்திக் கமலத்தின்
நகுவாய் மலர்மே லன்ன
முறங்கும் நறையூரே (6.5.6)

பெரிய திருமொழி.547

பாசுர எண்: 1494

பாசுரம்
முந்து நூலும் முப்புரி
நூலும் முன்னீந்த,
அந்த ணாளன் பிள்ளையை
அந்நான்றளித்தானூர்,
பொந்தில் வாழும் பிள்ளைக்
காகிப் புள்ளோடி,
நந்து வாரும் பைம்புனல்
வாவி நறையூரே (6.5.7)

பெரிய திருமொழி.548

பாசுர எண்: 1495

பாசுரம்
வெள்ளைப் புரவைத் தேர்விச
யற்காய் விறல்வியூகம்
விள்ள, சிந்துக் கோன்விழ
வூர்ந்த விமலனூர்,
கொள்ளைக் கொழுமீ னுண்குரு
கோடிப் பெடையோடும்,
நள்ளக் கமலத் தேற
லுகுக்கும் நறையூரே (6.5.8)

பெரிய திருமொழி.549

பாசுர எண்: 1496

பாசுரம்
பாரை யூரும் பாரந்
தீரப் பார்த்தன்தன்
தேரை யூரும் தேவ
தேவன் சேருமூர்,
தாரை யூரும் தண்தளிர்
வேலிபுடைசூழ,
நாரை யூரும் நல்வயல்
சூழ்ந்த நறையூரே (6.5.9)

பெரிய திருமொழி.550

பாசுர எண்: 1497

பாசுரம்
தாமத் துளப நீண்முடி
மாயன் தான்நின்ற
நாமத் திரள்மா மாளிகை
சூழ்ந்த நறையூர்மேல்,
காமக் கதிர்வேல் வல்லான்
கலிய னொலிமாலை,
சேமத் துணையாம் செப்பு
மவர்க்குத் திருமாலே (6.5.10)

Enter a number between 1 and 4000.